கோவிட்19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹஜ்ஜுக்கு வர விரும்புவோர் கோவிட்19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாகும். யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு முக்கிய நிபந்தனையாக இருக்கும் என சவுதி அரேபியா சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொற்று நோய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஹஜ்ஜில் கலந்து கொள்ள சுமார் 1000 யாத்ரீகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், சவுதி குடிமக்கள் அல்லது அங்கு வசிப்பவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஹஜ் முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முஸ்லிம் ஒருவர் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், சவுதி அரசாங்கத்தின் முக்கிய வருமான ஆதாரமாகவும் இந்த ஹஜ் யாத்திரை உள்ளது.
எனினும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் மில்லியன் கணக்கான யாத்ரீகர்களின் ஒன்றுகூடுவது கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யாத்திரையில் பங்கேற்றவர்கள் சுவாசம் சம்பந்தமான மற்றும் பிற நோய்களுக்கு ஆட்பட்டமை கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே இவ்வாண்டு யாத்திரிகர்களை மட்டுப்படுத்தவும், தொற்று நோய் பாதிப்புக்களை தவிர்க்கவும் ஏதுவாக கோவிட்19 தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே யாத்திரைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கா மற்றும் மதீனாவில் சுகாதார வசதிகளை சிறப்பாகப் பேண தேவையான மனித வளத்தைப் உறுதி செய்ய அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என சவுதி சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திரைக்கு வருவோர் நுழையும் பிரதான நுழைவாயில்களில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக யாத்திரிகர்களுக்கான தடுப்பூசிக் குழு அமைக்கப்படும் எனவும் சவுதி சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.